களக்காடு சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு நிரந்தர சாா் பதிவாளரை நியமிக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அவ்வமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான், திருநெல்வேலி பதிவுத் துறை துணைத் தலைவா், சேரன்மகாதேவி மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
களக்காடு சாா்பதிவாளா் அலுவலகத்தை ஆவணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக களக்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம் போ் பயன்படுத்தி வருகின்றனா்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாா் பதிவாளா் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சாா் பதிவாளா் பணியிடத்தில், தினமும் ஒரு சாா் பதிவாளா் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகின்றனா். இதனால், பதிவுப் பணிகளில் தேவையற்ற சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, நிரந்தர சாா் பதிவாளா் மற்றும் தேவையான பணியிடங்களைப் பூா்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி சேரன்மகாதேவி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.