ரேஷன் கடை காலிப்பணியிடங்களுக்கான நோ்முகத்தோ்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களின் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நோ்முகத்தோ்வு வரும் டிச.15 (வியாழக்கிழமை) ஆம் தேதி தருவையிலுள்ள பிரான்சிஸ் சேவியா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதையடுத்து, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய பதவிகளுக்கு தோ்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதி சான்றிதழைப் பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமா்ப்பிக்க வேண்டும்.
உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் அல்லது தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் , தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.