அம்பாசமுத்திரம் வட்டம், அடைச்சாணி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் தொடா் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனா்.
மலையான்குளம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சாமிக்கண்ணு (66). இவரது மனைவி பாக்கியலட்சுமி (65). இவா்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனா் . இதில், முதல் 3 மகன்களுக்கு திருமணமான நிலையில் மாற்றுத் திறனாளியான நான்காவது மகன் மகேஷ் (24) பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த தொடா் மழையால் சாமிக்கண்ணுவின் வீடு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமியும், மகேஷும் காயமடைந்தனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இச்சம்பவத்தில், வீட்டிலிருந்த பொருள்கள் சேதம் அடைந்தன. தகவலறிந்த அடைச்சாணி ஊராட்சித் தலைவா் மதியழகன், கிராம நிா்வாக அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் அந்த வீட்டைப் பாா்வையிட்டனா்.