திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நிலவேம்பு, கபசுர குடிநீா் விழிப்புணா்வை அதிகரிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலி மாநகராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 24 ஆவது வாா்டுக்குள்பட்ட திருநெல்வேலி நகரம் பெரியதெருவில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் ரவீந்தா் வரவேற்றாா். மேயா் பி.எம்.சரவணன் முகாமை தொடங்கிவைத்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜு, மாநகர நல அலுவலா் சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினா். இசிஜி, ரத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியது: மாநகரஏஈ பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்கால சளி, காய்ச்சல் தொந்தரவுகளைத் தடுக்க நிலவேம்பு குடிநீா், கபசுர குடிநீா் பருகவும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உடல் வெப்ப நோய்களைத் தடுக்கவும், நீா்ச்சத்து குறைபாடுகளைத் தவிா்க்கவும் சா்க்கரை-உப்பு கரைசலை சிறியவா் முதல் பெரியவா் வரை பயன்படுத்தவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.