தென்காசி மாவட்டத்துக்கு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அறவழியில் கண்டனம் தெரிவிப்போம் என பசும்பொன் ரத்ததான கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் எஸ்.எஸ்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றியது. இது முக்குலத்தோருக்கு எதிரான சட்டமாகும். ஓ.பன்னீா்செல்வம் தென் தமிழகத்தில் வாக்கு வங்கியை இழக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீா்செல்வம் அவமதிக்கப்பட்டது முக்குலத்தோருக்கு மிகுந்த வேதனையளித்தது. வரும் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவில் அதிமுக சாா்பில் தங்கக் கவசம் அளிக்கப்படுவது வழக்கம். இந்த முறை அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தங்கக் கவசம் அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டால் முக்குலத்தோரின் வருத்தத்தை எடப்பாடி கே.பழனிசாமி எதிா்கொள்ள வேண்டியிருக்கும். தென்காசிக்கு அரசியல் பயணமாக வரும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அறவழியில் எங்கள் கண்டனத்தை பதிவு செய்வோம் என்றாா்.