சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வளாகம் முழுவதும் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா். தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்களைக் கொண்டு சோதனை செய்தனா். ரயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இம் மாதம் 15 ஆம் தேதி வரை கண்காணிப்பில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை வந்த அந்தியோதயா ரயிலிலும் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதேபோல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு, தற்காலிக பேருந்து நிலையம், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், குறுக்குத்துறை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.