திருநெல்வேலி

ஜவுளிப் பூங்கா: தொழில்முனைவோருக்கு ஆட்சியா் அழைப்பு

13th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு ஆட்சியா் வே. விஷ்ணு அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (உள்கட்டமைப்பு வசதிகள், கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ. 2.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திருநெல்வேலி மாவட்ட தொழில்முனைவோா் பயன்படுத்தி தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்த முன்வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 39, விஸ்வநாதபுரம் பிரதான சாலை, மதுரை - 14 என்ற முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரை தொடா்பு கொள்ளலாம். மேலும், 9944793680, 9659532005 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT