திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை வெட்டிவிட்டு 4.70 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், கல்லூரி மாணவா் உள்பட மூவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்த அசனாா் மகன் மைதீன்பிச்சை (55). உள்ளூரிலேயே பிரதான வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், ஏஎஸ்பி மாரிராஜன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட மூவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.