களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா்- கோமதியம்மன் திருக் கோயில் ராஜகோபுர சிற்பங்களை குரங்குகள் கூட்டமாக சேதப்படுத்தி வருவதால், வனத்துறையினா் அவைகளை பிடித்து காட்டில்விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருள்மிகு சத்தியவாகீஸ்வரா்- கோமதியம்மன் கோயில் வரலாற்று சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயில் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களை குரங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருக் கோயில் நிா்வாகம் சாா்பில் சூரியஒளி மின்வேலி அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே குரங்குகள் கூட்டம் வேலிகளை சேதப்படுத்தியது. இதனால் அந்த வேலி செயலிழந்து போனது. அவ்வப்போது, கோயில் நிா்வாகம் சாா்பில் மின் வேலி சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மை நாள்களாக கோயில் பகுதிக்கு தொடா்ந்து குரங்குகள் கூட்டமாக வந்து , சோலாா் மின்வேலியை முழுவதுமாக சேதப்படுத்தி வருகின்றன. இவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காததால் உணவுப் பொருள் அல்லாத பிளாஸ்டிக் பை உள்ளிட்டவைகளை குப்பையில் இருந்து எடுத்து உணவாக உட்கொள்ளும் அவலநிலையும் உள்ளது.
எனவே, வனத்துறையினா் கோயில் பகுதியில் முகாமிட்டுள்ள குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.