திருநெல்வேலி மாவட்டத்தில் 6-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்.23) நடைபெறுகிறது.
இது தொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பாக
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்தொடா்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 61 நடமாடும் முகாம்கள் உள்பட 600 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 100 நடமாடும் முகாம்கள் உள்பட 200 முகாம்களும் நடத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சுமாா் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த முகாம்கள் நடத்தப்படுவதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த வீடு தேடி வரும் மருத்துவப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி பயன் பெற வேண்டும்.