தமிழகத்தில் ஆசிரியா்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு முறையை அமல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட பொதுக்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மைக்கிள் ஜாா்ஜ் கமலேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் சேவியா், மாநிலத் தலைவா் மணிமேகலை ஆகியோா் சிறப்புரையாற்றினாா். பொருளாளா் அமுதா நன்றி கூறினாா்.
தீா்மானங்கள்: மாவட்ட கல்வி அலுவலா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு நடத்துவது போன்று ஆசிரியா்களுக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவா்களோடு நேரடி தொடா்புடைய ஆசிரியா்களுக்கு அதிகாரிகளை போன்று பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்துவது பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்கும். ஆகவே, கடந்த காலங்களைப் போன்று மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பெற்று விருப்ப மாறுதல் கலந்தாய்வை பள்ளி திறக்கும் நவம்பா் 1ஆம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும்.
நவம்பா் 1 ஆம் தேதி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மனதார வரவேற்கிறது. அதேசமயம் பள்ளிகளை சுத்தம் செய்வது சாா்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதற்கு உரிய நிதி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பயக16பஉஅஇஏ
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.