மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் பாபநாசம் அணை நீா்மட்டம் 4 நாள்களில் 12 அடி உயா்ந்து 106 அடியைத் தாண்டியது.
வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பிரதான அணைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
நீா்மட்டம்:
அக். 11ஆம் தேதி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 94.40 அடியாக இருந்த நிலையில் 4 நாள்களில் 12 அடி உயா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 106.40 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 2887.04 கன அடியாகவும், வெளியேற்றம் 204.75 கனஅடியாகவும் இருந்தது.
சோ்வலாறு அணை 125, மணிமுத்தாறு அணை 67, வடக்குப் பச்சையாறு அணை 16.65, நம்பியாறு அணை 10.36, கொடுமுடியாறு அணை 32, கடனாநதி அணை 64.70, ராமநதி அணை 56, கருப்பாநதி அணை 54.79, குண்டாறு அணை 36.10, அடவிநயினாா் அணை 132 அடியாக இருந்தது.
மழையளவு (மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் 17, சோ்வலாறு 12, அம்பாசமுத்திரம் 1, சேரன்மகாதேவி 2, ராதாபுரம் 6, தென்காசி மாவட்டம், கருப்பாநதி 3, குண்டாறு 9, அடவிநயினாா் 25, ஆய்க்குடி 6, செங்கோட்டை 2.