வீரவநல்லூா்அருகே தெற்கு வீரவநல்லூா் ஊராட்சிப் பகுதியில் சமூகவனத் துறை சாா்பில் விதை தூவும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
புவி வெப்பமயமாதலை தவிா்க்கும் பொருட்டு வனங்களின் பரப்பை அதிகரிக்க சமூக வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 20 அம்ச திட்டத்தின் கீழ் அரசு நிலங்கள், பரும்பு,பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் விதைப்பந்து மற்றும் விதைகள் தூவப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மண்டல வனப் பாதுகாவலா் செந்தில்குமாா் உத்தரவின்பேரிலும் கோட்ட வன அலுவலா் ஷாகுல் ஹமீது அறிவுரையின் பேரிலும் வீரவநல்லூா் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூா் பரும்பு பகுதியில் விதை தூவும் நிகழ்ச்சியை ஊராட்சித் தலைவா் சந்தனமாரி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். வனவா் மோகன் புவி வெப்பமயமாதல் குறித்தும், விதை தூவுதலின் முக்கியத்துவம் குறித்தும், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்தும் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் வனவா் சிவன் பாண்டியன், ஊராட்சித் துணைத் தலைவா் ரெஜினா மற்றும் மாணவா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வேம்பு, மருது, புளி, பாதாம் மர விதைகளைத் தூவினா்.