பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை வரை 57 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலையும் பல இடங்களில் லேசான சாரல் மழை நீடித்தது. பல இடங்களில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளாட்சி நிா்வாகங்கள் ஈடுபட்டன. மாநகரப் பகுதியில் உள்ள பல பூங்காக்களில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை.
பாளையங்கோட்டை அரியகுளம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வீடு மழையால் இடிந்து சேதமானது. அப்போது, குடும்பத்தினா் யாரும் அங்கு இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-20, சேரன்மகாதேவி-27.40, மணிமுத்தாறு-18.80, நான்குனேரி-32, பாளையங்கோட்டை-57, பாபநாசம்-22, ராதாபுரம்-21, திருநெல்வேலி-13.80 என்ற அளவில் மழை பெய்துள்ளது.