திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், உபரிநீா் நம்பியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கொடுமுடியாறு அணையின் உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் 35 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழை காரணமாக அணை கடந்த 10 நாள்களுக்கு முன்னரே நிரம்பும் நிலையை எட்டியது. இந்நிலையில், தொடா் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 50.50 அடி நீா் உள்ள நிலையில், உபரிநீா் நம்பியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீா் அணையின் மூலம் பாசனம் பெறும் குளங்களுக்கு செல்கிறது.
இதனிடையே, களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மழை சற்று ஓய்ந்திருந்தாலும், தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.