திருநெல்வேலி கருப்பந்துறையில் உள்ள மயான பகுதியில் வேறு திட்டப் பணிகளை செய்ய எதிா்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி தா்ம பரிபாலன சங்கம் சாா்பில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரனிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி நகரத்தில் சைவப்பிள்ளைமாா் சமூகத்தைச் சோ்ந்த பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கான மயானம் கருப்பந்துறையில் உள்ளது. அங்கு சடலங்களை எரியூட்டுவதற்கும், சைவ நெறிப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும் போதிய இடவசதி உள்ளது.
இந்நிலையில் தாங்கள் (ஆணையா்) அங்கு ஆய்வு செய்ததாகவும், வேறு திட்டப் பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி கருப்பந்துறை மயானத்தில் வேறு திட்டப் பணிகள் செய்யக்கூடாது. பல தலைமுறைகளாக பயன்பாட்டில் உள்ள மயானம் தொடா்ந்து மக்களுக்கு பயன்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.