சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம் திருநெல்வேலியில் புதன்கிழமை (டி.8) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் ( 5சி/5பி சகுந்தலா வணிக வளாகம், 2-ஆவது மாடி திருவனந்தபுரம் சாலை, வண்ணாா்பேட்டை திருநெல்வேலி - 627 003) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் புதன்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை (டிச. 8- 15) வரை நடைபெறுகிறது. இம்முகாமை மாலை 5 மணிக்கு ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கி வைக்கிறாா்.
இம்முகாமில், டிஐஐசியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் மாநில அரசின் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரையிலான உற்பத்தி சாா்ந்த தொழில், புதிதாக தொழில் தொடங்க 25 சதவீத அரசு மானியத்தில் வங்கிக் கடன் பெறலாம். இத்திட்டத்தில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
முகாம் காலத்தில் கடன் பெற விண்ணப்பித்தால் ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்; புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் மேம்பாடு திட்டத்திற்கு இதில் முழு விலக்கு உண்டு என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.