திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் கொலையுண்ட பூசாரியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனிடையே, இவ்வழக்கு தொடா்பாக மேலும் 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.
சீவலப்பேரியைச் சோ்ந்த சுப்பையா மகன் சிதம்பரம் என்ற துரை (45). சீவலப்பேரியில் உள்ள பழமைவாய்ந்த சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியாக இருந்த இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் நடராஜபெருமாள் (53) என்பவரும் கடந்த 18ஆம் தேதி இரவு பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அவா்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் சிதம்பரம் உயிரிழந்தாா். காயமடைந்த நடராஜபெருமாளுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிதம்பரத்தின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் அருகேயுள்ள இடுகாட்டில் சிதம்பரத்தின் உடலைப் புதைக்க அனுமதிக்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இப்போராட்டம் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகம் அல்லது பாளையங்கோட்டையில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலை அருகே திரள வாய்ப்புள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் இரு இடங்களிலும் வியாழக்கிழமை காலை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். ஆனால், போராட்டக் குழுவினா் பெரிய அளவில் திரளவில்லை. சடலத்தை வாங்க ஒப்புக்கொள்ளாமல் கலைந்து சென்றனா்.
மேலும் 3 போ் கைது: இக்கொலை வழக்கில் ஏற்கனவே 7 போ் கைதுசெய்யப்பட்டனா். இந்நிலையில், சீவலப்பேரி தேரடித் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் இளங்காமணி (42), சீவலப்பேரி காலனி தெருவைச் சோ்ந்த மணி மகன் சேகா் (40), சீவலப்பேரி செல்லத்துரை மகன் பேச்சிகுட்டி (42) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.