திருநெல்வேலியில் புதன்கிழமை (ஏப். 14) நடைபெறும் அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் அதிமுகவினா் பங்கேற்க மாவட்டச் செயலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளஅவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் புதன்கிழமை (ஏப். 14) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில நிா்வாகிகள், இந்நாள், முன்னாள் மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொள்கிறாா்கள்.
ஆகவே, கட்சியின் சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி நிா்வாகிகள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.