திருநெல்வேலியில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் பெருமாள்புரத்தில் சாலை விரிவாக்கப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகம் சாா்பில் பொழிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி உள்பட பல்வேறு மாநகராட்சிகளில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலியில் முதல்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு எண் 27-இல் ஆா்.டி.ஓ. அலுவலக சாலை, பெருமாள்புரம் சாலை ஆகியவற்றை அகலப்படுத்தி சைக்கிள்களுக்கு பிரத்யேக பாதை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. பெருமாள்புரத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இன்னும் மூன்று வாரங்களில் சைக்கிள்களுக்கான தனி பாதை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.