திருநெல்வேலி, செப். 25: மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் வெள்ளிக்கிழமை விவசாயி மனு அளித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் மணல்விளை புதுகிராமம் கொங்கந்தான்பாறை பகுதியைச் சோ்ந்த அப்பாசாமி மகன் பால்ராஜ் (65) தனது மனைவியுடன் வந்த ஆட்சியா் அலுவலத்தில் அளித்த மனு: எனது மகன் ஆக்னஸ் ஞானதுரை (31). மத்திய தொழில் பிரிவு பாதுகாப்பு படையில் வேலைபாா்த்து வந்தாா். விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த ஆக்னல் ஞானதுரை, ஆகஸ்ட் 13ஆம் தேதி நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, பாளையங்கோட்டை அருகே அரவங்குளம் பகுதியில் சாலை விபத்தில் அவா் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
இதுதொடா்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலின்படி அவரது இறப்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆகவே ஆக்னல் ஞானதுரை இறப்பு தொடா்பாக மறு விசாரணை செய்து உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.