திருநெல்வேலி, செப். 25: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியம் ரூ. 5,200 முதல் ரூ. 20,200 வரையும், தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகித ஆபத்து படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாா் வசம் வழங்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் நாராயணன், முத்துராமலிங்கம், செய்யது யூசுப்ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி கோட்ட பொருளாளா் எம்.முருகன் நன்றி கூறினாா்.