டீக்கடைக்காரர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வே.சுப்பிரமணியன் என்பவரின் மகன் சு.கணேசன்(59). இவர் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் மனு அளிக்கவந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடியாது எனவும், அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில்தான் மனுவை போடவேண்டும் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து மனுவை பெட்டியில் போட வரும்போது திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குறித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக கணேசன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு அனுப்பியுள்ள மனு: எனது தந்தை சுப்பிரமணியன் பெயரில் 4 ஏக்கர் நிலம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ளது.
இதில் 2 ஏக்கர் நிலத்தை விற்று விட்டோம். தற்போது எங்களிடம் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் எங்கள் தந்தையின் கல்லறையும் உள்ளது. இந்த நிலத்தை நானும் எனது சகோரரரும் பராமரித்து வருகிறோம். இந்த நிலத்தில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 2015ஆண்டு வரை எனது தந்தை உள்பட எங்களின் மூதாதையர் 7 பேரின் கல்லரைகள் உள்ளன. இந்த கல்லறைகளை வியாழக்கிழமை சிலர் உடைத்து சேதப்படுத்திவிட்டு இந்த இடம் எங்களுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடுகின்றனர்.
இது குறித்து எங்கள் பகுதி காவல்துறையினரிடம் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் இதற்கு உரிய தீர்வு காணும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.