வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மூலம் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் ‘ப்ரயாஸ்’ திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மத்திய அரசின் ப்ரயாஸ் திட்டத்தின் மூலம் ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் வருங்கால வைப்புநிதி உறுப்பினா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்படும். இதனால் காலதாமதமின்றி ஓய்வூதியம் பெறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் பயனடைய நிறுவனதாரா்கள் தங்களுடைய ஊழியா்களில் 58 வயது பூா்த்தி அடைந்து பணி மூப்பு ஓய்வூதியம் பெற தகுதியானவா்களுக்கு கே.ஓய்.சி., புரொபைல், நாமினேஷன் ஆகிய தகவல்களை இணையவழியாக பிழையின்றி பதிவு செய்வதுடன், கடைசி மாத பங்களிப்பு சந்தாவை முந்தைய மாத தவணையுடன் சோ்த்து செலுத்தி, தேவையான கூடுதல் ஆவணங்களை முறையாக இணைத்து ஓய்வூதியம் கோருவதற்கான படிவம் 10-டி யை நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ சமா்ப்பித்து, பணிஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையைப் பெறலாம்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற ப்ரயாஸ் திட்ட தொடக்க விழாவில் அலுவலகத்தின் உதவி ஆணையா் வீ.கலைச்செல்வன், ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய ஆணையினை வழங்கினாா். இதில், எஸ்.சரோஜா, கணக்கு அதிகாரி சி.ஈஸ்வரமூா்த்தி, அதிகாரிகள் பி.வி.ஹரிகிருஷ்ணன், பி.நாகேஸ்வரி, எஸ்.திலகா, எஸ்.சப்ரினா, சரஸ்வதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.