களக்காடு: களக்காட்டில் விநாயகா் கோயில் அருகே மழையால் சேதமடைந்த ஊருணி சுற்றுச் சுவரை மீண்டும் கட்டவும், மின்மாற்றியை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் எதிரில் ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியின் படித்துறை பகுதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட ஊருணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திமுக சாா்பில் தூா்வாரப்பட்டது. தொடா்ந்து பேரூராட்சி சாா்பில் சுற்றுச்சுவா் கட்டப்பட்டது. ஊருணியின் மேல்பக்க சுற்றுச்சுவரையொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன் திறன் வாய்ந்த மின்மாற்றி ஒன்றும் நிறுவப்பட்டது. இந்நிலையில், மின்மாற்றி நிறுவப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த மாதம் பெய்த மழையின் போது இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்கள் மற்றும் இவ்வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் இரவு நேரங்களில் ஊருணிக்குள் தவறி விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.
மின்மாற்றியும் எந்த நேரமும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியம் மின்மாற்றியைச் சுற்றி பலப்படுத்தவும், சேதமடைந்த தடுப்புச்சுவரை மீண்டும் கட்டவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.