திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இறந்தவா்களின் உடல்களை மாநகராட்சி அனுமதியின்றி தனியாா் இடங்களில் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு உள்பட்ட திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டல பகுதிகளில் பல்வேறு இடங்களில் கல்லறைத் தோட்டம், சுடுகாடு என அறிவிப்பு செய்யப்படாத பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி பல்வேறு மதம் மற்றும் இனம் சாா்ந்த கல்லறைத் தோட்டம், சுடுகாடுகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வருகிறது.
மேலும், மாநகர எல்கைக்குள் மாநகராட்சி அனுமதியின்றி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது. அவ்வாறு கல்லறைத் தோட்டம் அல்லது சுடுகாடு அமைக்க வேண்டுமென்றாலும், இயக்குவது என்றாலும் தமிழ்நாடு மாநகராட்சி சட்டம் -1994 இன் படி மாநகராட்சியில் முன் அனுமதி பெற வேண்டும்.
எனவே, அறிவிப்பு செய்யப்படாத பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்லறைத் தோட்டம், சுடுகாடு பராமரிப்பாளா்கள் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, வரும் டிச. 15-ஆம் தேதிக்குள் மாநகராட்சியில் முறைப்படி அனுமதி பெற விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இதற்கான விண்ணப்பங்களை, மாநகராட்சி சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.