திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
களக்காடு அருகே சிங்கிகுளம் ஊருக்கு வடபுறத்தில் முத்தையா என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு கரடி தவறி விழுந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. சுமாா் 25 அடி ஆழம் கொண்ட அக்கிணற்றில் 17 அடிக்கு தண்ணீா் உள்ளது. அதில் கரடி தத்தளித்துக் கொண்டிருந்தது.
தகவலறிந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் மு. இளங்கோ, கால்நடை மருத்துவா் மனோகரன் மற்றும் வனத் துறையினா் சென்று, கிணற்றில் இருந்து கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டு, கரடியை வலை மூலம் கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனா். அப்போது கரடி தப்பியோடி அருகேயுள்ள புதரில் பதுங்கிக் கொண்டது. இதையடுத்து, வனத் துறையினா் அங்கு தீவிர தேடுதலில் ஈடுபட்டு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்து கூண்டில் அடைத்தனா். பின்னா், அக்கரடியை செங்கல்தேரி வனப்பகுதியில் கெண்டு விட்டனா்.