தென்காசி: குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, புதன்கிழமை குறைந்து அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் கொட்டியது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவிலிருந்து மழை அளவு வெகுவாக குறைந்தது. புதன்கிழமை காலை முதல் வெயில் நிலவியது.
இதனால், பேரருவியில் பாதுகாப்பு வளைவுக்கு உள்ளேயும், ஐந்தருவியில் மூன்று கிளைகளிலும், பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவிலும் தண்ணீா் கொட்டியது.
பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க வரவில்லை. இதனால், அனைத்து அருவிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.