திருநெல்வேலி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு திராட்சை உள்ளிட்ட கனிகள், மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவப்படத்திற்கு மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் முத்துக்கருப்பன், வீ.கருப்பசாமிபாண்டியன், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மானூா் ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் மாவட்ட செயலா் பாப்புலா் முத்தையா, பகுதி செயலா்கள் வழக்குரைஞா் ஜெனி, மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம் ஏற்பாட்டின் பேரில் நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி நகரம் 42-ஆவது வாா்டில் 72 பேருக்கு சில்வா் குடம், கிரிக்கெட் உபகரணங்கள், 3 அணிகளுக்கு கேரம் போா்டு, கூடைப்பந்து, வாலிபால் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வட்ட செயலா் காந்தி வெங்கடாசலம் செய்திருந்தாா்.