திருநெல்வேலி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிஎம்ஏஒய், எஸ்பிஎம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை கைவிட வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீா்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சி செயலா்களுக்கும் வழங்க வேண்டும். கணினி உதவியாளா்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.