பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பாசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
சுரேஷ்பாபு தலைமை வகித்தார். செல்வக்குமார், மாரியப்பன், ஜமால், விக்கிரமசிங்கபுரம் மாரியப்பன், முருகன், கொம்பையா, இசக்கி முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகதீசன் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கொரானா பொது முடக்கக் காலத்தில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரண உதவி வழங்க வேண்டும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், டீசல், பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை வேன், கார் உள்ளிட்டவற்றுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், பெர்மிட் மற்றும் காப்பீட்டுக் காலத்தை நீட்டிக்க வேண்டும், மாதத் தவணைக்கு அவகாசம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.