வீரகேரளம்புதூர் அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தை பலியானது.
சுரண்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி(37). இவரது மனைவி தீபா (30). தம்பதியின் மகள் ஜனனி (4). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் சமுத்திரக்கனி, கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி தீபா மற்றும் மகள் ஜனனியுடன் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆலங்குளம் - சுரண்டை சாலையில் கழுநீர்க்குளம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம்.
தகவலறிந்த வீரகேரளம்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரையும் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், செல்லும் வழியிலேயே குழந்தை ஜனனி இறந்தது. பலத்த காயமடைந்த சமுத்திரக்கனி, தீபா ஆகிய இருவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.