திருநெல்வேலி

ஊட்டச்சத்து திட்ட விழிப்புணர்வு முகாம்

22nd Sep 2019 04:41 AM

ADVERTISEMENT


 ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் (போஷன் அபியான்)  ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு முகாம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் பெ. விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாநகர நல அலுவலர் சத்தீஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில், ஊட்டச்சத்து திட்டத்தின் நன்மைகள், வயிற்றுப்போக்கு நோயைத் தடுக்கும் சுயமான முன்னெச்சரிக்கை வழிகள் குறித்து விளக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் எஸ். தமிழரசி கூறுகையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதல் வாரத்தில் பள்ளிகள், குடியிருப்புகளில் உள்ள பெண்களைச் சந்தித்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை கணக்கிடும் பணிகள் நடைபெற்றன.
இரண்டாவது வாரத்தில் நகரின் விரிவாக்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்து தடுப்பூசிகளின் நன்மைகள், குறிப்பிட்ட சில தடுப்பூசிகள் போடாதவர்களுக்கு தடுப்பூசிகள் போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. மூன்றாவது வாரத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்க தேவையான வழிகள் குறித்து விளக்கப்பட்டது. சத்தான உணவுகள், உணவுக்கட்டுப்பாடு, இரும்புச்சத்து உள்ள உணவுகள், புரதச்சத்துகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நான்காவது வாரத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் அளிக்கப்பட்டு வருகிறது. கைகளை நன்றாக கழுவிய பிறகு உணவு உண்ண வேண்டும். ஓஆர்எஸ் கரைசல், இளநீர், மோர், எலுமிச்சைச்சாறு போன்ற வயிற்றுப்போக்கு தடுப்பு பானங்களை அருந்துவதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டுள்ளது என்றார்.
பேருந்து நிலைய பயணிகளுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நீர்மோர் மற்றும் பானங்களும் வழங்கப்பட்டன. மருந்தாளுநர் கணேசன், செவிலியர் சுப்புலட்சுமி, சொர்ணம், ஷகிலா, மஞ்சு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT