சிவகிரி அருகே தொழில்போட்டியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான கேபிள் டிவி வயரை எரித்து சேதப்படுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இனாம்கோவில்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ராஜு மகன் கனகராஜ் (46). இவர், அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த 14 ஆம் தேதி இரவு இனாம்கோவில்பட்டியிலிருந்து ஏ. சுப்பிரமணியபுரம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு இவருடைய கேபிள் டிவி வயர் எரித்தும், அறுத்தும் சேதப்படுத்தப்பட்டதாம். இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில், ராஜபாளையத்தில் கேபிள் டிவி நடத்திவரும் விருதுநகர் மாவட்டம், மலையடிப்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சஞ்சீவிகனி தூண்டுதலின்பேரில் கேபிள் டிவி வயரை சிலர் எரித்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், புத்தூர் ஆசாரி தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் என்ற காவல்துரை (48), அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் சக்தி (42), நச்சாடஈஸ்வரன் மகன் சீனிவாசன் (30), மேலவரகுணராமபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெயச்சந்திரன் என்ற வடிவேலு (19)ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள சஞ்சீவிகனியை தேடிவருகின்றனர்.