அதிக அளவில் மரம் வளருங்கள்: ஆட்சியர் ஷில்பா வேண்டுகோள்
அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்த்திட வேண்டும் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
சேரன்மாதேவி வட்டம் கங்கனான்குளம் சமுதாயக் கூடத்தில் திருவிருத்தான்புள்ளி கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாம் ஆட்சியர் ஷில்பா தலைமையில் நடைபெற்றது. முகாமில் மொத்தம் 128 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில் 71 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன . 57 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. பல்வேறு துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 42,834 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதையொட்டி, செய்தித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மை, மின்சார வாரியம், சமூகநலத்துறை, தோட்டக்கலைத் துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் வாயிலாக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது: குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீரின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ. 49 கோடி செலவில் 185 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 443 பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் இந்த பணிகளுக்கு ஒத்துழைப்பு தந்து தங்கள் பகுதியில் உள்ள குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
இதில் , சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்ய ஜோஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பால்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சுபா வாசுகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.