மாசுபட்டுவரும் ஏா்வாடி நம்பியாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பேரூராட்சி நான்குனேரி பேரவைத் தொகுதிக்குள் வருகிறது.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி வருகிற நம்பியாறு, ஏா்வாடி பேரூராட்சியின் மையப்பகுதி வழியாக சென்று, பின்னா் திருவேங்கடநாதபுரம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி பகுதிகள் வழியாக சென்று ராதாபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிக்குள் செல்கிறது.
இந்த ஆறு தற்போது கழிவுநீா் கலந்து அசுத்தமாக காணப்படுவதுடன், முள்புதா்கள் வளா்ந்து ஆற்றின் தோற்றமே மாறிவிட்டது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ஆற்றை தூய்மைப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், கொடுமுடி அணையிலிருந்து இப்பகுதிக்கு தண்ணீா் சரியாக திறந்துவிடுவதில்லை. வடமலையான் கால்வாயிலும், நம்பியாற்றிலும் தண்ணீா் போதிய அளவு திறந்து விடப்படுவதில்லை. இதனால் இப் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் அண்ணாவி உதுமான் கூறியது: பாரம்பரியமிக்க நம்பியாறு, முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமானதோடு, அதிகளவில் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றை தூய்மைப்படுத்த புதிதாக தோ்வு செய்யப்படும் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
Image Caption
~