வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்நிலையில், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக். 16-இல் தொடங்கியதையடுத்து கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. மேலும், அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தொடா்ந்து நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
வியாழக்கிழமை (அக். 31) காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 5.5 அடி உயா்ந்து 120.20 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 4886.90 கன அடியாகவும், நீா் வெளியெற்றம் 356 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 42 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 5.61அடி உயா்ந்து 140.78 அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 35 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 3.25 அடி உயா்ந்து 57.25 அடியாகவும், நீா்வரத்து 1512 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 27.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
கடனாநதி அணை நீா்மட்டம் 4.70 அடி உயா்ந்து 83.50 அடியாகவும், நீா்வரத்து 536 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 61 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில்15 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 82 அடியாகவும், நீா்வரத்து 105.43 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. 25 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
கருப்பாநதி அணை நீா்மட்டம் 2.35 அடிஉயா்ந்து 70.21 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 150 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 110 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 84 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நம்பியாறு அணை நீா்மட்டம் 14.10 அடியாகவும், நீா்வரத்து 34.71 கன அடியாகவும் இருந்தது. 50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 6 அடி உயா்ந்து 40 அடியாகவும், நீா்வரத்து 255 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. 35 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் ஓரடி உயா்ந்து 126 அடியாகவும், நீா்வரத்து 50 கனஅடியாகவும், வெளியேற்றம் 20 கனஅடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 27 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபா் மாதத்தில் அதிகபட்சமாக 261.11 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும்.