திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் கலைப் பண்புகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருநெல்வேலி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2018-19ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த கலைஞர் விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை இணமணி பட்டத்துக்கு குரலிசை பிரிவில் சங்கரேஸ்வரனும், கலை வளர்பணி பட்டத்துக்கு தவில் பிரிவில் கதிர்வேல் அருணாசலமும், கலைச்சுடர்மணி பட்டத்துக்கு ஓவியப் பிரிவில் மாரியப்பனும், கலை நன்மணி பட்டத்துக்கு நாகசுரம் பிரிவில் முருகனும், கலை முதுமணி பட்டத்துக்கு கரகாட்டம் பிரிவில் ஆறுமுகத்தம்மாளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவின்போது, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கெளரவிக்கப்படும்.