திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனச்சரகப் பகுதியில் குடில் அமைத்து 5 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்த குற்றவாளியை வனத் துறையினர் கைதுசெய்தனர்.
கடையம் வனச்சரகம், கடனாநதி அணைக்கு மேல் கோரக்கநாதர் வனப்பகுதி உள்ளது. இங்கு புகழ்பெற்ற கோரக்கநாதர் கோயில் உள்ளது. கடந்த 19 ஆம் தேதி இந்தப் பகுதியில் வனச்சரகர் நெல்லைநாயகம் உத்தரவின்பேரில், வனத் துறை அதிகாரிகள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கோரக்கநாதர் கோயில் அருகே குடில் ஒன்று இருப்பதை கண்டு அதை கண்காணித்தனர். இந்நிலையில், அந்தக் குடிலுக்கு வந்த ஒருவரை வனத் துறையினர் பிடித்து வனச்சரக அலுவலகத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர், கடலூர் மாவட்டம், ஐவதக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன்(39) என்பதும், ரயிலில் சுத்தம் செய்வதுபோல பயணிகளை நோட்டம்விட்டு சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்மீது மதுரை, சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது, சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தது, வனப் பகுதியில் இவர், 5 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்தது அனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தது, மரங்களை வெட்டியது, வனப் பகுதியை ஆக்கிரமித்து சமையல் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்த வனத் துறையினர், அவரை அம்பாசமுத்திரம் கிளைச் சிறையில் அடைத்தனர். பல கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக்க வனப் பகுதியில், ஒரு தனிநபர் குடில் அமைத்து கடந்த 5 ஆண்டுகளாக மறைந்திருந்தது கடனாநதி அடிவாரப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.