திருநெல்வேலி மேற்கு மாவட்ட பேருந்துகளுக்காக பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பேட்டை நகர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமுமுக பேட்டை நகர பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பொறுப்புக்குழு தலைவர் அப்பாஸ் கில்மி தலைமை வகித்தார். எம்.என்.பி. பள்ளிவாசல் தலைமை இமாம் ஷாகுல் ஹமீது தொடங்கி வைத்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அப்துல் கனி வரவேற்றார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அஜிஸ், செய்யது, மூஸா, சேவத்தா, சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பேச்சாளர் நெல்லை நிஜாம் உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலர் உஸ்மான் கான் சிறப்புரையாற்றினார். பேட்டையில் உள்ள வார்டுகள் 46, 47, 48, 49, பேட்டை நகரம், சுத்தமல்லி ஆகிய கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிகளை ஜாபர் ஒருங்கிணைத்தார்.
திருநெல்வேலி மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அணுகு சாலைகள் குறைபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கான புதிய பேருந்து நிலையத்தை பேட்டையில் அமைக்க வேண்டும்; திருநெல்வேலியில் மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமைகளைக் கட்டுப்படுத்தி, தனியார் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்; பேட்டை காயிதேமில்லத் மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யாஸின் நன்றி கூறினார்.