திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மக்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு, பாளையங்கோட்டை வட்டத்தில் 10 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் மணீஸ் நாராணவரே உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.