ஆலங்குளத்திலிருந்து தென்காசி செல்வதற்கு 3 மணி நேரமாக பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்தை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குளம் பேருந்து நிலையித்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணியிலிருந்து இரவு 8. 30 மணி வரை தென்காசிக்கு செல்வதற்கு பேருந்துகள் எதுவும் வரவில்லை. அங்கு பயணிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால், ஆத்திரமுற்ற பயணிகள், தென்காசியில் இருந்து அவ்வழியாக தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா். எனினும், போலீஸாரோ, போக்குவரத்து அதிகாரிகளோ வரவில்லை. இதனால், ஓட்டுநரும், நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனா். சற்று நேரத்தில் தென்காசிக்கு இரு பேருந்துகள் அடுத்தடுத்து வந்ததால் தூத்துக்குடி பேருந்துக்கு வழிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.