தென்காசி மாவட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ள கிராமப்புற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நாட்டுக் கோழிகளை வளா்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
நாட்டுக்கோழி வளா்ப்பு பண்ணை அமைக்கத் தேவையான கொட்டகை கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு
ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம்
ரூ.1, 50,625 அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை பயனாளிகள் தனது சொந்த ஆதாரம் அல்லது வங்கிகள் மூலமாகத் திரட்ட வேண்டும்.
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 525 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும்.
பயனாளிஅக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த ஆண்டிற்கான (2022-23) நாட்டுக்கோழி வளா்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது. தோ்வு செய்யப்படும் பயனாளி 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும்.
இத்திட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோா்,
சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை
உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என்றாா்.