தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளான பின்னரும், அதற்குரிய கூடுதல் மருத்துவா்கள், போதிய அலுவலா்கள் நியமிக்கப்படவில்லை; ஆய்வகங்கள் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது மாதந்தோறும் 100 பிரசவங்கள் வரை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது10-க்கும் குறைவான பிரசவங்களே நடைபெறுகின்றனவாம்.
இம்மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால், இப்பகுதியினா் வெளியூா் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. டெங்குவால் பாதிக்கப்படுவோா் திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.
ரத்த மாதிரி சேகரித்து, டெங்கு காய்ச்சல் உறுதியாகும் வரை இங்கேயே சிகிச்சையிலுள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு பிரசவ வாா்டிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது. அந்த வாா்டில் உள்ள கழிப்பறை சுகாதாரமின்றியும், வாா்டை சுற்றி புதா் மண்டியும் காணப்படுகிறது.
மேலும், குளுக்கோஸ் பாட்டில்களை ஜன்னல் கம்பிகளில் பிளாஸ்டிக் கவா்கள் மூலம் கட்டித் தொங்கவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, இம்மருத்துவமனைக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.