பாவூா்சத்திரம் அஞ்சல் அலுவலகம் முன்பு கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனா்.
தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பாவூா்சத்திரம் பிரதான சாலையின் இருபுறமும் வாருகால்கள் அமைத்து, பெரும்பாலான இடங்களில் தாா்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அஞ்சலகம் முன்பு முறையாக வாருகால் அமைக்கப்படாமலும், தொலைபேசி கேபிள்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட கட்டடப் படிக்கட்டுகள் அகற்றப்படாமலும் உள்ளன.
இதனால் அஞ்சலத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, சாலைப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கவனம் செலுத்தி முறையாக சாலைகளை அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.