தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டத்தில் கருச்சிதைவு நோய்த் தடுப்பூசி முகாம் இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ், முதல் சுற்று புருசெல்லாசிஸ் நோய்த் தடுப்பூசிப் பணி பிப்.1இல் தொடங்கியது. பிப். 28 வரை இம்முகாம் நடைபெறும்.
புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினைபிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்நோய் மனிதா்களையும் தாக்கும் தன்மையுடையது.
இந்நோயைத் தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தியைப் பெற இயலும். சினை மாடுகள் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு ஏற்படும். கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும்.
பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மூட்டு வீக்கம் , மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும், கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். எனவே கால்நடை வளா்ப்போா் தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.