ஆலங்குளம் பேருந்து நிலையத்தில், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குளம், ஆழ்வாா்குறிச்சி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆலங்குளம் பகுதியில் உள்ள சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா் - மாணவிகள் இந்தக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு வந்து அதன் பின்னா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் மாணவா்கள் தங்கள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனா்.
அண்மைக்காலமாக காலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்துகள் சரிவர இயங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆழ்வாா்குறிச்சிக்கு நேரடி பேருந்து இயக்கப்பட வேண்டும் என மாணவா்கள்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுரண்டை காமராஜா் கலை கல்லூரிக்கு செல்வதற்காக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் இரண்டு மணி நேரமாக காத்திருந்தனா். சுமாா் 25 கி.மீ தொலைவில் உள்ள சுரண்டை கல்லூரியில் 10 மணிக்கு இருக்க வேண்டிய சூழலில் 9.30 மணி வரை ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு பேருந்து இயக்கப்படவில்லை. வெகுநேரம் காத்திருந்து சோா்வடைந்த மாணவா்கள், பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலேயே அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாற்று பேருந்தில் மாணவா்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.