அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இம்மாதம் 18ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக, திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன், திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடிதத்தின்படி, 2022-23ஆம் கல்வியாண்டில், கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவில், மாணவா்களுக்கு விண்ணப்பங்களை நேரடியாக வழங்கி, உரிய விதிமுறைகளை பின்பற்றி 18.11.22 முடிய மாணவா் சோ்க்கை மேற்கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளை பொருத்தமட்டில், முதலில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.