தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரலுடன், குளிா்ந்த காற்று வீசியது. விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
காலையில் நீா்வரத்து குறைவாக இருந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மாலையில் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், முதலில் ஐந்தருவியிலும், பின்னா் பேரருவியிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் மாலை 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.