பாவூா்சத்திரம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள பழுதான ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி, கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பள்ளியில் பழுதான ஒரு வகுப்பறைக் கட்டடம் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. மற்றொரு வகுப்பறைக் கட்டடத்தின் சுவா்கள், மேற்கூரை இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதாகவும், இதனால், பள்ளி தனியாா் கட்டடத்திலும், மரத்தடியிலும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவியா், பெற்றோா் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டுவந்தனா். இடிக்கப்பட்ட கட்டடத்துக்குப் பதில் புதிய கட்டடம் கட்ட வேண்டும், பழுதான கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, வட்டார வளா்ச்சி அதிகாரி கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பழுதான கட்டடத்தை விரைந்து சீரமைக்கவும், புதிய கட்டடப் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா்.